புதுச்சேரி

புதுச்சேரி விழித்துக் கொள்ளும் முன்னரே நான் எழுந்து நடக்க ஆரம்பித்திருந்தேன். அண்ணாநகர் முதன்மை சாலை - கடைசியோ முதலோ - அது வரை வந்து நெல்லித் தோப்பு பக்கமாக திரும்பாது, வில்லியனூர் சாலையில் மெதுவாக நடந்தேன். அமைதியாக இருந்தது இடம். ஆள் அரவம் அதிகம் இல்லை. தென்னை மரங்கள் உயர்ந்து நின்றன. மற்ற பிரதேசங்களை விட, மரத்தின் உயரம் அதிகம் என்று தோன்றியது - இருக்கும். ஏதாவது வேற்றுமை தெரிய வேண்டும். பத்தாண்டகளாக வந்து போகிற இடம்தான். இருந்தாலும் புதிதாகவே தெரிந்தது. பழக வேண்டும். ஒரு வேளை நிரந்தரமாக இங்கேயே இருந்து அத்துடன் முடிந்தாலும் நல்லதே.

புதுச்சேரி விழித்துக் கொள்ளவில்லை என்று சொன்னது தவறு. காலையில் நடப்பவர்கள் அதிகமில்லையே தவிர வேறு இடங்களிலிருந்து வந்த வண்டிகள் ஓடிக்கொண்டு தான் இருந்தன. நாய்கள் தெருக்களில் அதிகமாக தென்பட்டன. குரைப்பது குறைவு.

புதுச்சேரி கிராமமா நகரமா என்ற ஐயப்பாடு ஏற்கனவே உண்டு. கிராமத்திற்கு அது, கிராமம். மண் குடிசைகளும், ஐரோப்பிய நகரங்களைப் பிரதிபலிக்கும் கட்டிடங்களும் இருந்தபடியால், பார்த்துக் கொள்ள முடியுமே தவிர பதில் சொல்ல முடியாது. ஒரு சித்தர் பூமி என்று சொல்லலாம். அப்படித்தான் முடியாது. ஒரு சித்தர் பூமி என்று சொல்லலாம். அப்படித்தான் சொல்ல வேண்டும். சித்தர்களைத்தான் படிக்க முடியுமே தவிர கேள்வி கேட்க முடியாது. குறைந்தபட்சம் கேள்விகளுக்கு பதில் கிடைக்காது. முதலில் கேள்வி தோன்றுவதே கஷ்டம்.

இந்த வயதிற்கு இந்த ஆரோக்யம் போதும் என்று மருத்துவ நண்பர் பட்டணத்தில் கூறினார். அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவன் ஆன படியால் - அதுவும் நலத்துறை - மருத்துவர்களோடு நட்பு அதிகம். உடல் நலத்தைப் பற்றி திருப்தியாக சொல்ல முடியாது. மருத்துவர்களின் நட்பு மட்டும் உடல் நலத்தை தந்து விடாது - நடக்க வேண்டும். நேற்று நடந்து விட்டபடியால் இன்றைக்கு மாலையில் நடந்து கொள்ளலாமே என்றுதான் முதலில் எண்ணம் தோன்றியது. மாலையில் நடப்பது கடினம். விரைந்து செல்லும் மக்கள் கூட்டத்தில் நடை பயில முடியாது. கீழே விழ வேண்டியும் வரலாம். காலையில் தான் நன்று. பலர் நடந்து செல்வது இப்போது தெரிகிறது. வேறு சாலைகளில் இதைவிட அதிக கூட்டம் இருக்கலாம். பேசிக்கொண்டே நடக்கிறார்கள். இங்கே பேசும் தமிழ் மனத்திற்கு இதமளிக்கிறது. அநேகமாக ஆங்கில பேச்சு இல்லை. பட்டணத்தில் ஆங்கிலம் பேசியாக வேண்டும். நாற்பதுகளில் சென்னையில் தெலுங்கு பேசுவோர் அதிகமாக இருக்கும் அரசு அலுவலகங்கள் இருந்தன. அப்போது அங்கே ஆங்கிலம் தான் துணை. நாட்டிற்கு பொது மொழி வேண்டும் என்கிறார்கள் - உலகத்திற்கு வேண்டாமா என்ன? நிறைய படித்த நண்பர் சாரு நிவேதிதா கூட இந்தியாவின் பொதுமொழி இந்தி என்று குறிப்பிடுகிறார். அது சரிதானா? நாட்டு விடுதலைக்கு முன்னர் இந்தியாவின் பொது மொழி எதுவோ? அது சரி. ஒரு நாட்டிற்கு பொது மொழி கட்டாயம் தேவை - ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்று சொன்னால் அவ்வாறு பொதுமொழி இல்லாத நாடு ஒரு நாடாக இருந்திருக்குமா அல்லது நாடாகுமா - தெரியவில்லை.

கொசுக்கள் இருக்கின்றன. கொசுக்களால் மலேரியா பரவுகிறது என்று ரொனால்டு ராஸ் சொல்லி அறிந்தாயிற்று. சங்க காலத்திலும் மலேரியா இருந்திருக்கும். அப்போது யாரும் கொசுவை குற்றம் சொல்லியிருக்க மாட்டார்கள். அம்மையப்பன் என்று மணிவாசகர் அழைத்த சிவனையும் அப்படித்தானே பார்க்க முடியும். விவசாய நாகரீக கால கட்டத்திற்கு முன்னர் அப்பன் இருக்க முடியாததாகையால், சிவனும் இங்கே அப்படித்தான். இருக்கட்டும். என்றாலும் கூட எப்படி இந்த மணிவாசகர் ஒரு சித்தாந்தவாதியாகவும் கவிஞனாகவும் இருக்க முடிந்தது என்று தெரியவில்லை. சித்தாந்தம், தத்துவம் எல்லாம் அறிவுலகை சார்ந்தது. கவிஞன் அறிவுலகவாதி இல்லை அல்லவா? அப்படிப்பட்டவர்கள் கவிஞர் என்றும் பெயரெடுப்பது ரொம்பவும் கஷ்டம். எல்லாரும் வள்ளுவராகி விட முடியாது.

வணிகப் பத்திரிகைகள் இங்கு எந்தப் பகுதியிலம் கிடைக்கின்றன. சிறு பத்திரிகைகளை வாங்க குறிப்பிட்ட இடத்தில் உள்ள கடைவரை செல்ல வேண்டி உள்ளது. அதனாலென்ன - சிறு பத்திரிகைகளும் குறைந்துவிட்டன. மதவெறித்தனம் கொண்ட பத்திரிகைகூட தமிழில் சிறு பத்திரிகை என்று சொல்லிக் கொண்டு வெளிவருகிறது. வணிக பத்திரிகை என்று சொல்லிக் கொண்டு வெளிவருகிறது. வணிக பத்திரிகைகள் எங்கும் கிடைக்கின்றன. ஆனால் படிக்க வேண்டிய எல்லாவற்றையும் தொலைக்காட்சியில் பார்த்தே விடலாம். பத்திரிகை கடைகளில் கூட்டம் சேருகிறது. காலையில் முக்கிய செய்திகளை பத்திரிகை படிப்பதற்கு பதிலாக அந்தப் பத்திரிகை சுவரொட்டிகளை கண்டே அறிந்துவிடலாம்.

புதுச்சேரியின் எல்லா பகுதிகளும் பட்டணமாக மாறும் காலம் விரைவில் இருக்கும். கிராமச் சாயல் மாறிவிடும். அது வரப்பிரசாதமா - சாபக்கேடா - எப்படியும் இருக்கலாம். இங்குள்ள கவிஞர் ஒரு கவிதையில்,
எங்கேயடா என் கிராமம்
அடேய்? ரியல் எஸ்டேட்
பாவிகளே?

என்று மண்ணை வாரித் தூற்றுகிறார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு சொல் - இரு சொல் - இவற்றில் கவிதை அம்சம் வெளிப்பட்டு விடுகிறது. கவிஞன் வெளிப்பட்டு விடுகிறான்.
- விருட்சம், 2008

No comments:

Post a Comment